அரசு மருத்துவமனைகளில் மின் பணியாளர்கள் நியமிக்க வலியுறுத்தல்
கம்பம்: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மின் பணியாளர் பணியிடத்தை நிரப்ப அரசு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம் மருத்துவமனைகளில் பெரியகுளம், கம்பம் மருத்துவமனைகள் நுாற்றாண்டை கடந்தவை. இரு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சைகள், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் வசதியும் உள்ளது. இங்குள்ள கட்டடங்களில் கட்டடம் கட்டும் போது மின் ஒயரிங் செய்தது. எக்ஸ்ரே, மின் விசிறிகள், ஜெனரேட்டர்கள், ஆப்பரேஷன் தியேட்டர்களில் உள்ள மின்சாதன பொருள்களை பராமரிக்க மின் பணியாளர் தேவை. மின் பழுது ஏற்படும் ஒவ்வொரு முறையும், வெளியில் இருந்து மின்பழுது நீக்க பணியாளர்களை அழைத்து வர வேண்டி உள்ளது. ஆப்பரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது பழுது ஏற்பட்டால் சிரமமாகி விடுகின்றன. எனவே அரசு மருத்துவமனைகளில் மின் பணியாளர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர்கள் கோரினர்.