திருநெல்வேலி, : துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம், 51; ஸ்ரீவைகுண்டம் தனியார் வங்கி காவலாளி. நேற்று காலை சைக்கிளில் கடைக்கு சென்றார். அப்போது பலமாக காற்று வீசியது. அந்த தெருவில் உள்ள ஒரு தென்னை மரம் முறிந்து இரண்டு மின் கம்பங்களுக்கு இடையிலான மின் ஒயர் மீது விழுந்தது. மரம் விழுந்த வேகத்தில் இரண்டு கான்கிரீட் மின் கம்பங்களும் முறிந்து ரோட்டில் விழுந்தன.இதில், சங்கரலிங்கம் மீது மின்கம்பம் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது சைக்கிளும் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மின்வாரியத்தினர் தரமற்ற மின்கம்பங்கள் நிறுவுவதால் அடிக்கடி விபத்துகள், உயிர்ப்பலிகள் நடக்கின்றன. இதை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உஷா தேவி, பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.துாத்துக்குடி சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் கூறியதாவது:கடந்த ஏப்ரலில் துாத்துக்குடி, காமராஜர் நகரில் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்த தொழிலாளி பெத்துக்குமார், 26, மின்கம்பம் உடைந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் பணியாற்றி வந்தார். அவருக்கு இழப்பீடு வழங்கவில்லை. மின் கம்பங்களின் தரம்மற்ற தன்மை குறித்து மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவுக்கு புகார் செய்தேன். அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.திருநெல்வேலி மண்டல தலைமை மின்பொறியாளர் டேவிட் ஜெபசிங் கூறியதாவது:மின் கம்பங்களை மின்வாரியமே தயாரிக்கிறது. திருநெல்வேலியில் வாணியங்குளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, விருதுநகர் மாவட்டத்தில் வலையப்பட்டி ஆகிய இடங்களில் கம்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தரமும், 500 கம்பங்களுக்கு ஒரு கம்பம் வீதம் பரிசோதிக்கப்படுகிறது. காற்றின் வேகம் மற்றும் மரம் விழுந்ததால் மின் கம்பங்கள் உடைந்துள்ளன. பழுதான மின்கம்பங்கள் புகாரின் அடிப்படையில் மாற்றப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்கதை
மின்கம்பங்கள் உடைந்து உயிர்பலி ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசேலம் அருகே நயினார்பாளையத்தில் மின்கம்பம் உடைந்து மின் ஊழியர் சோழன், 27, பலியானார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் மின்கம்பம் உடைந்து பிரபாகரன் என்பவர் பலியானார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே மோள காளி பாளையத்தில் மின்கம்பம் உடைந்து கார்த்திக், 29, பலியானார். விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே தென்பாலையில் மின்கம்பம் உடைந்து ஒப்பந்த ஊழியர் தங்கமணி, 24, பலியானார். இவ்வாறு மின்கம்பங்கள் உடைந்து, 25 - 30 வயது இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவும், தரமற்ற மின்கம்பங்களை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.