கவின் ஆணவக்கொலை வழக்கு எஸ்.ஐ., ஜாமின் மனு தள்ளுபடி
திருநெல்வேலி:திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த ஐ.டி., ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித் தந்தை எஸ்.ஐ., சரவணன் ஜாமின் மனுவை கூடுதல் அமர்வு நீதிபதி எஸ். ஹேமா தள்ளுபடி செய்தார். சரவணன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி., சார்பில் கூறியதாவது: சரவணனும், அவரது மனைவி கிருஷ்ணகுமாரியும் கவினைக் கொல்லும் திட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர். சம்பவத்துக்குப் பின் சுர்ஜித் ஆதாரங்களை அழிக்க தூண்டினார். போலி எண் பலகையுடன் வாகனம் வாங்கிக் கொடுத்ததும், ரத்த ஆடைகளை எரிக்க அறிவுறுத்தியதும் சரவணன் தான் என தெரிவிக்கப்பட்டது. சரவணன் வெளியே வந்தால் சாட்சிகளைக் கலைக்கவும், விசாரணையைத் தடுக்கவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி, சிறப்பு அரசு வழக்கறிஞரும், கவினின் தாய் தமிழ்செல்வியின் வழக்கறிஞரும் கடுமையாக எதிர்த்தனர். அதை ஏற்று நீதிபதி எஸ். ஹேமா, சரவணனின் ஜாமின் மனுவை நிராகரித்தார்.