உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்

காட்டாறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள்... ஆழப்படுத்தப்படுமா? பூண்டி மலையில் வீணாகும் நீரை சேமிக்கலாம்

திருவள்ளூர் : பூண்டி மலையில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே வனத்துறை சார்பில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகளை ஆழப்படுத்தினால், மழைக்காலத்தில் வழிந்தோடும் தண்ணீரை சேமிக்க முடியும். இதன் வாயிலாக, விவசாய பயன்பாட்டிற்கும், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் மழைநீரை கொண்டு வரலாம்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, ஆந்திர - தமிழக எல்லையில் மலை பாங்கான பகுதியில் அமைந்துள்ளது. வனத்துறை பராமரிப்பில், காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு, மான், நரி, ஓநாய், குரங்கு போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. வன விலங்குகள் குடிநீர் அருந்துவதற்காக, வனத்துறை சார்பில், மலைகளில் பெய்யும் மழைநீர் வடிந்தோடும் ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.

வறண்ட தடுப்பணைகள்

பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம், அல்லிகுழி, திம்மபூபாலபுரம், பப்பிரெட்டிகண்டிகை, கூனிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.இந்த தடுப்பணைகள் அனைத்தும் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. மேலும், உயரம் குறைவாக கட்டப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இதனால், கன மழை பெய்தாலும், சிறிய அளவிலேயே தண்ணீர் தேங்கி, உபரிநீர் வழிந்தோடி வீணாகி வருகிறது.எனவே, உயரம் குறைவாக உள்ள இந்த தடுப்பணைகளை ஆழப்படுத்தி, ஓடைகளையும் அகலப்படுத்தினால், மழைக் காலத்தில் கூடுதல் தண்ணீர் சேகரிக்க முடியும்.இதனால், தடுப்பணைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களின் ஏரி, குளங்கள் நிரம்பும். விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பூண்டி மலை பகுதி ஆந்திர மாநிலம் கனகம்மாசத்திரத்தில் துவங்கி, சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், வழியாக நாகலாபுரம் வரை பரந்து, விரிந்து உள்ளது. மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து உள்ளன. இவற்றை தவிர, ஆங்காங்கே சிறு, சிறு குன்றுகளும் உள்ளன.மழைக் காலத்தில் பெய்யும் கனமழையால், மலைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தண்ணீர் வரும் வழியில், தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் தேங்கி வீணாகிறது. இந்த ஓடைகளை முறைப்படுத்தி, துார்வாரி, அகலப்படுத்தி, தடுப்பணைகளை கட்டி சேகரிக்கலாம். இதை வனத்துறையும், பொதுப்பணி துறை - நீராதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, பூண்டி வனப்பகுதிகளை ஆய்வு செய்து, தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரைகளை உயர்த்தி வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் கூறியதாவது:பூண்டி காப்புக் காடு பகுதியில், வன விலங்குகள் தண்ணீர் அருந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த அணையில் சேகரமாகும் தண்ணீரை, அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், விவசாய தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால் தான், தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கரையை உயர்த்த இயலும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழிகாட்டும் ஆந்திரா

பின்பற்றுமா தமிழகம்?அண்டை மாநிலமான ஆந்திரா மலைகள், காட்டாறு, ஓடைகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து தடுப்பணைகள் கட்டி சேகரித்து வருகிறது. l ஆந்திராவின் சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் - அம்மபள்ளி கிராமங்களுக்கு இடையே, இரு மலைகளின் குறுக்கே, 1975ல் 4.37 கோடி ரூபாயில் அணை கட்டப்பட்டது. இங்கு, 17.22 கோடி கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இந்த அணை வாயிலாக, 17 கிராமங்களில், 6,125 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த அணையில் இருந்து தான் கொசஸ்தலை ஆறு உற்பத்தியாகி தமிழகத்திற்கு வருகிறது.l சத்தியவேடு அருகே பீரகுப்பம் என்ற கிராமத்தில், 7 கோடி ரூபாய் செலவில், 2007ல் தடுப்பணை கட்டப்பட்டது. சுற்றிலும் உள்ள மூன்று மலைகளுக்கு நடுவில் இத்தடுப்பணை அமைந்துள்ளது. மழைக் காலத்தில் பெய்யும் தண்ணீர், மூன்று மலைகளில் இருந்தும் ஓடி வந்து இந்த அணையில் தேங்கும். இதில், 900 மில்லியன் கன அடி தண்ணீர் வரை தேக்கி வைக்க முடியும். இதன் வாயிலாக, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.l வரதய்யபாளையம் நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க, 2012ம் ஆண்டு, 900 மில்லியன் கன அடி தண்ணீரை சேகரிக்கும் வகையில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2,900 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. தற்போது கூட, பாலாற்றுக்கு நீராதாரமாக விளங்கும் மலை பகுதிகளில் உள்ள ஓடைகளின் குறுக்கே, 17க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டியுள்ளது. இப்படி, ஆந்திர மாநில மலைகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேகரித்து வரும் நிலையில், தமிழக அரசும், இயற்கை தந்த மலைகளில் தடுப்பணை கட்டினால், வீணாகும் தண்ணீரை சேகரித்து, தன்னிறைவு பெற முடியும்.

தடுப்பணைகள் சேதம்

திம்மபூபாலபுரம், பப்பிரெட்டிகண்டிகை, பிளேஸ்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து விட்டன. தடுப்பு சுவர்களின் கீழ்பாகம், தடுப்புச்சுவர் உள்ளிட்டவை, வெள்ள அரிப்பால் சேதமடைந்து உள்ளன. இதனால், மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தடுப்பணை மேலும் சேதமடைந்து உடைப்பு ஏற்படும் அபாயம் நிலை உள்ளது.

கிராமங்களுக்கு குடிநீர் வசதி

பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பிளேஸ்பாளையம் - கூனிப்பளையம் - சீத்தஞ்சேரி சாலை, பூண்டி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், இப்பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணைகளால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, இச்சாலையின் ஓரமாக, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்ய, ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணைகளை ஆழப்படுத்தி, கூடுதல் தண்ணீரை சேமிக்கும் பட்சத்தில் ஆண்டு முழுதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை