* திருவள்ளூருக்கென மாவட்ட கூட்டுறவு வங்கி... எப்போது?: 29 ஆண்டுகளாக துாங்கி வழியும் அதிகாரிகள்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு, 29 ஆண்டுகளாகியும், இங்கு செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும், காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியாகவே செயல்படுகிறது. இதை பிரித்து, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியாக செயல்படுத்தும் கருத்துரு, அரசின் பரிசீலனைக்கு அனுப்பியும், இதுவரை முடிவு கிடைக்காமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.காஞ்சிபுரம், திருவள்ளூர் இணைந்து செங்கல்பட்டு மாவட்டமாக இயங்கி வந்தது. 1997ம் ஆண்டு, ஜன., 1ம் தேதி முதல், திருவள்ளூர் தனி மாவட்டமாக உதயமானது.மாவட்ட பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டது. இங்கு, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மேலும், வனம், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளின் மாவட்ட அலுவலகம் இந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.ஆனால், கூட்டுறவு துறையில் வரும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மட்டும் இன்றளவும், காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு சங்கத்தின் கீழ், மொத்தம், 49 கிளைகள் உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிளைகள் உள்ளன. இந்த கிளைகள் அமைந்துள்ள பகுதிகளில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி என்ற பெயரில் தான் செயல்படுகிறது.அதேபோல, மொத்தம் உள்ள 282 வேளாண் தொடக்க கூட்டுறவு வங்கிகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 123 வங்கிகள் செயல்படுகின்றன.திருவள்ளூர் பிரிக்கப்பட்டு, 29 ஆண்டுகளாகியும் இன்றும், காஞ்சிபுரம் மாவட்ட பெயரிலேயே கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்குவது கூட்டுறவு வேளாண் வங்கிகள் தான். இங்கு, உறுப்பினர்களுக்கு தொழில் கடன், நகை கடன், திருமண கடன் போன்றவற்றையும் வழங்குகின்றனர். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் கெடுபிடி குறைவு.இதனால், விவசாயிகள் அல்லாது பொதுமக்களும் உறுப்பினர்களாக சேர்ந்து கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர். உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் தொகை, ஆவடி கனரக தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்திற்கு தான் செல்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் வசூலாகும் பணம் அனைத்தும், காஞ்சி, செங்கை மாவட்டத்திற்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது. அதே சமயம், அம்மாவட்டங்களைவிட, திருவள்ளூர் மாவட்டத்திற்கு அளிக்கப்படும் கடன் தொகையும் குறைவாகவே உள்ளது.இந்த குளறுபடியால், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் செலுத்தும் பணத்தை முழுதும், தாங்களே பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நிதி குறைபாட்டினை காரணம் காட்டி, கடன் வழங்கும் எண்ணிக்கையை வங்கி அலுவலர்கள், குறைத்துக் கொள்கின்றனர்.ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இதுகுறித்து முறையிட்டாலும், மாவட்ட நிர்வாகம் அரசிடம் கருத்துரு அனுப்பி வருகிறோம் என்பதை, பல ஆண்டுகளாக கூறி வருகிறது.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு வங்கிகள் செயல்பட்டால், இம்மாவட்டத்தில் வசூலாகும் நிதியை கொண்டு, இம்மாவட்ட விவசாயிகளே முழுவதும் பயனடைவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து, தனியாக கூட்டுறவு வங்கி செயல்பட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு அனுமதி வழங்கினால், திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக பிரிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும்' என்றார்.காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் செயல்படும் வங்கி, சங்கங்கள் ஒரு ஒப்பீடு:சங்கங்களின் வகை காஞ்சி, செங்கை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் மொத்தம்வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் 159 123 282ஊரக வங்கி 1 1 2பணியாளர் கூட்டுறவு சங்கம் 55 82 137கூட்டுறவு கடைகள் 14 14 28தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி 7 11 18நகர கூட்டுறவு வங்கி 5 1 6கூட்டுறவு சந்தை சங்கம் 3 3 6நெசவாளர் கூட்டுறவு சங்கம் 92 79 171வீடு கட்டும் சங்கம் 13 1 14பால் சங்கம் 99 28 127இதர சங்கம் 37 16 52மொத்தம் 485 359 844