பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம், 45. இவர் பொன்னேரி அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர், 2017 மே 7ம் தேதி, இரவு பணி முடிந்து, மறுநாள் வங்கியில் செலுத்துவதற்கான விற்பனை பணம், 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பைக்கில் ராகவரெட்டிமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.கும்மிடிப்பூண்டி அருகே செல்லும்போது, காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திருச்செல்வத்தின் பைக்கை இடித்து அவரை கீழே தள்ளியது. கத்தியால் அவரை தாக்கி, 12 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்துகொண்டு தப்பியது.இச்சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய சோழவரம் பெரியகாலனியை சேர்ந்த அருண், 23, மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன் என்ற கார்த்திக், 22, மதன்குமார், 25, புழல் பகுதியை சேர்ந்த பக்ருதீன், 23, மீஞ்சூர், வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருண், 25, ஆகியோரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை முடிவில், மேற்கண்ட ஐந்து பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி பிரேமாவதி நேற்று முன்தினம் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.