உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சார ரயிலில் ஓசி பயணம் விதிமீறுவோர் மீது நடவடிக்கை

மின்சார ரயிலில் ஓசி பயணம் விதிமீறுவோர் மீது நடவடிக்கை

சென்னை: சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ் இயக்கப்படுகின்றன. அதேபோல, மாவட்டங்களுக்கு இடையே 100க்கும் மேற்பட்ட குறுகிய துார பயணியர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.ஓரளவுக்கு கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய, பயணியர் கூடுதல் பணம் கொடுத்து முதல் வகுப்பு பெட்டி 'பாஸ்' எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.ஆனால், சிலர் இந்த பெட்டிகளில் உரிய டிக்கெட் அல்லது 'பாஸ்' இல்லாமல் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, ரயில்வே கடைநிலை ஊழியர்கள், போலீசார் விதிமீறி பயணிப்பதால், மற்ற பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க, மாதந்தோறும் கிலோ மீட்டர் துாரத்துக்கு ஏற்றார் போல், முதல் வகுப்பு பாஸ் 1,200 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரையில் பணம் கொடுத்து வாங்கி பயணிக்கிறோம்.ஒரு ரயிலில் மொத்தமாகவே 100 இருக்கைகள் மட்டுமே இதற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், உரிய பாஸ் இல்லாமல், ரயில்வே கடை நிலை பணியாளர்கள், போலீசாரும் அதிகளவில் வந்து அமர்ந்து பயணிக்கின்றனர். டிக்கெட் பரிசோதகர்களும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் ரயில்வே ஊழியர்கள், போலீசார் பயணம் செய்யக் கூடாது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ