ஆவடி மாநகராட்சி ரூ.8.59 கோடி பற்றாக்குறை: பட்ஜெட் தாக்கல்
ஆவடி:ஆவடி மாநகராட்சியில் ரூ.8.59 கோடி பற்றாக்குறை உள்ளதாக, கமிஷனர் கந்தசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.ஆவடி மாநகராட்சி கூட்டம், மேயர் உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி முன்னிலையில், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், கமிஷனர் கந்தசாமி 2025 - 26 நிதியாண்டுக்கான 'பட்ஜெட்' தாக்கல் செய்தார். அதை மேயர் உதயகுமார் பெற்றுக் கொண்டார்.அதில், வருவாய் மற்றும் மூலதன நிதியாக 773.91 கோடியும் செலவினமாக 782.50 கோடியும் உள்ளது. இதனால் பற்றாக்குறை 8.59 கோடியாக உள்ளது, என நிதிநிலை அறிக்கையில் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு வருவாய் 280.97 கோடி ரூபாய்; செலவினம் 277.24 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. பற்றாக்குறை கடந்த ஆண்டை விட 3.73 கோடி ரூபாய் கணிசமாக குறைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு 350 கோடி; தார்ச்சாலைக்கு 60 கோடி; சிமென்ட் சாலைக்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தவிர, இந்த நிதியாண்டில், கூடுதலாக பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.175 கோடியும்; குடிநீர் திட்டத்திற்கு ரூ.175 கோடியும்; மழைநீர் வடிகால், சாலை பணிக்கு முறையே ரூ.40 கோடி, ரூ.80 கோடி என, மொத்தம் 470 கோடி ரூபாய், அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, கூட்டத்தில் மொத்தம் 161 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது:மேகலா ஸ்ரீனிவாசன், 38வது வார்டு காங்., கவுன்சிலர்:எங்கள் வார்டில் இன்னும் வரி விதிக்கப்படாத கட்டடங்கள் உள்ளன. அவற்றை கணக்கெடுத்து வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் வார்டில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தினசரி மக்களிடம் திட்டு வாங்க வேண்டி உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் பதில்: வாரத்திற்கு இருமுறை, 'ப்ளூ கிராஸ்' உதவியுடன் நாய்கள் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள், தங்கள் வார்டில், வரி விதிக்கப்படாத கட்டடங்கள், வீடுகள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் வரி விதிப்பதற்கு உதவியாக இருக்கும்.ரேவதி, 34வது வார்டு காங்., கவுன்சிலர்:எங்கள் வார்டில், மின் கணக்கீடு முறையாக செய்யவில்லை. இதனால், நுகர்வோரே கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.5 லட்சம்/45 கோடி
பிரகாஷ், 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:எங்கள் வார்டில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி அரைகுறையாக உள்ளது. அதை முழுமையாக செய்ய வேண்டும். 15வது நிதி குழு மானியத்தில், 45 கோடி ரூபாய் மதிப்பீடில் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில், எங்கள் வார்டிற்கு வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கி உள்ளதால், அனைத்து வார்டிலும், ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஷீலா, 17வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:தினசரி கொசு தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தான் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இதனால், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.குப்பையால் அவப்பெயர்
மதுரை ஆறுமுகம், 25வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்:எங்கள் வார்டில் குப்பை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஒரு குப்பை வண்டியை வைத்து கண்துடைப்பிற்கு பணிகள் மேற்கொள்கின்றனர். எங்கள் வார்டில் 19 கால்வாய் உள்ளது. அவற்றை முறையாக துார்வார வில்லை. ஒப்பந்த ஊழியர்களால் முடியவில்லை என்றால், அந்த பணியை எங்களிடம் கொடுங்கள்; நாங்கள் பார்த்து கொள்கிறோம்.அப்போது குறுக்கிட்டு பேசிய, ம.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் காமேஷ், 'குப்பை பிரச்னையில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்' என்றார்.ஜோதிலட்சுமி, 22வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர்:குப்பை அள்ளும் பணியில் கடந்த இரு நாட்களில் 95 பேர் விடுப்பு எடுத்துள்ளனர். இப்படி இருந்தால், குப்பை பிரச்னை எப்படி சமாளிக்க முடியும். குப்பை கழிவை சாப்பிட வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் உயிர் பலி அபாயத்தில் பயணிக்கின்றனர். இதை தடுக்க, பிரதான சாலைகளில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.கார்த்திக் காமேஷ், 48வது வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர்:ஆவடி, திருவேற்காடு இணைக்கும் பருத்திப்பட்டு - கோலடி சாலையில், மின் விளக்குகள் எரியவில்லை. அதை சரி செய்ய வேண்டும். வி.ஜி.என். ராயல் பார்க் அருகே, கட்டி முடிக்கப்பட்ட பூங்காவை விரைந்து திறக்க வேண்டும். பெரும்பாலான கவுன்சிலர்கள், மாநகராட்சியில் குப்பை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்பது குறித்து பேசினர்.கடந்தாண்டு பட்ஜெட் விபரங்கள்
வருவாய் 492.94 கோடிசெலவினம் 505.26 கோடிபற்றாக்குறை 12.32 கோடி
பட்ஜெட் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விபரங்கள்: (கோடி ரூபாயில்)
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை 350தார்ச்சாலைகள் 60சிமென்ட் சாலைகள் 40கடனை திருப்பிச் செலுத்துதல் 19.30மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் 14 கட்டடங்கள் 15.67பூங்கா 10இயந்திர தளவாட சாமான்கள் 3தெரு விளக்கு மற்றும் மின்சார சாதனங்கள் 5இதர தளவாடங்கள் 2.60கனரக வாகனங்கள் 6.00இலகுரக வாகனங்கள் 3.00இதர வாகனங்கள் 2.10கல்வி நிலைய கட்டடங்கள், தளவாடங்கள் - 7.00 மொத்தம் 538.55 கடந்தாண்டை விட மேற்கூறிய செலவினங்கள் ரூ.252.85 கோடி உயர்ந்துள்ளது.
இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி வசூலிக்க, ஆவடி மாநகராட்சிக்கு அரசு 40 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் ஊழியர்களின் தீவிர முயற்சியால், கடந்த வாரம் அந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. இதில், சிறப்பாக செயல்பட்ட 11 ஊழியர்களுக்கு மேயர் உதயகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சுட்டிக்காட்டிய 'தினமலர்':கவுன்சிலர்களுக்கு பயிற்சி
நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், வரும் 4ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ேஹாட்டலில் கவுன்சிலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கவுன்சிலர்களுக்கான வேலைகள் மற்றும் அதிகாரங்கள் என்னென்ன. அரசிடம் இருந்து பொதுமக்களுக்கான திட்டத்திற்கான நிதி பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியில் தினமும் ஐந்து கவுன்சிலர்கள் சென்று பயிற்சி பெற உள்ளனர். கவுன்சிலர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும் என, ஏற்கனவே கடந்த 2022ல், 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.