உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / படம் மட்டும் ராஜ அலங்காரத்தில் பவானியம்மன் அருள்பாலிப்பு

படம் மட்டும் ராஜ அலங்காரத்தில் பவானியம்மன் அருள்பாலிப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் சுயம்புவாக தோன்றிய பவானியம்மன் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். இவ்விழாவில் தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.ஞாயிற்றுக்கிழமை அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அதற்கு முன்தினம் சனிக்கிழமை மாலை பெரியபாளையத்தில் குவிந்து விடுவர். மறு நாள் காலை பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, வேப்ப இலை ஆடை அணிந்தும், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். கடந்த, 17 ம் தேதி துவங்கிய ஆடி மாத விழாவில், முதல் ஞாயிற்றுக்கிழமை கடந்த, 21ம் தேதி நடந்தது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மாலை உற்சவர் அம்மன் சூர்ய பிரபை வாகனத்தில், பவானியம்மன் உமாமகேஸ்வரி அலங்காரத்தில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவிலில் பணியாற்றுபவர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மாலை, 4:00 மணிக்கு உற்சவர் அம்மன் குதிரை வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் ஏற்பாடு செய்தனர். ஊத்துக்கோட்டை உட்கோட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ