உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எண்ணுார் --- மாமல்லை சாலையில் சுரங்கப்பாதை கேட்டு மறியல்

எண்ணுார் --- மாமல்லை சாலையில் சுரங்கப்பாதை கேட்டு மறியல்

ஊத்துக்கோட்டை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, எண்ணுார் துறைமுகத்தில் இருந்து தச்சூர், பெரியபாளையம், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதுார், சிங்கப்பெருமாள் கோவில் வழியே, மாமல்லபுரம் வரை, 110 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்ட சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் திருவள்ளூர் - தாமரைப்பாக்கம் இடையே, மூலக்கரை பகுதியில் இருந்து வெங்கல் வரை, எறையூர், சித்தம்பாக்கம், மேலானுார், மொன்னவேடு, ராஜபாளையம், மெய்யூர், அரும்பாக்கம், மாளந்துார் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியினர் தங்களின் கல்வி, மருத்துவம், அத்தியாவசிய தேவைக்கு, மேற்கண்ட சாலை வழியே பயணித்து, மூலக்கரையில் இருந்து திருவள்ளூர் சென்று வருவர். இந்நிலையில், வெளிவட்ட சாலை அமைக்கும் பணியில் மூலக்கரை பகுதியில் சாலை வருகிறது. இந்த பகுதியில் சாலை அமைத்தால், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுற்றி வர வேண்டி உள்ளது. எனவே, மூலக்கரை பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து பாதித்ததால், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன், ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார், வெங்கல், பெரியபாளையம் காவல் ஆய்வாளர்கள் பாரதி, வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர். இதில், மூலக்கரை பகுதிக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து சுரங்கப் பாதை அமைத்து தரப்படும். அதுவரை பணிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ