| ADDED : மே 28, 2024 05:57 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இக்குடியிருப்புவாசிகளுக்காக, வீட்டு வசதி வாரியம் மற்றும் ஆவடி பைபாஸ் ஆகிய இடங்களில், மின்வாரியம் மின்மாற்றி அமைத்து, மின்சாரம் வழங்கி வருகிறது. இவ்விரண்டு மின்மாற்றிக்கு கீழ், பகுதிவாசிகள் குப்பை கொட்டி வருகின்றனர். குவிந்துள்ள குப்பைக்கு சிலர் தீ வைக்கின்றனர். இதனால், மின்விபத்து ஏற்பட்டு, மின்மாற்றி எரிந்து பெருத்த சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புட்லுார் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தை செவ்வாப்பேட்டை, திருவூர், அரண்வாயல்குப்பம் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் சென்னை, அரக்கோணம் மார்க்கமாக செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில், திருவூர் செல்லும் சாலையோரம் குப்பை குவிந்து வருகிறது.குப்பையை முறையாக அகற்றாததால் துர்நாற்றம் ஏற்படுவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில் பயணியர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில் சேகரமாகும் குப்பையை அகற்ற வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.