| ADDED : மே 28, 2024 05:44 AM
பெரியபாளையம்: சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரியபாளையம் ஊராட்சி. பெரியபாளையத்தில் இருந்து ராள்ளபாடி, கொசவன்பேட்டை, ஆரணி வழியே புதுவாயல் கூட்டுச் சாலை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. புதுவாயல், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரியபாளையம் செல்பவர்கள் மேற்கண்ட மாநில நெடுஞ்சாலை வழியே பெரியபாளையம் வரவேண்டும். மேலும், பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கல்லுாரி படிப்பிற்கு செல்பவர்கள் இந்த சாலை வழியே செல்ல வேண்டும்.கடந்தாண்டு பெய்த கன மழையால் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் இருந்து சின்னம்பேடு செல்லும் நீர்வரத்துக் கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றதால், காவல் நிலையம் அடுத்து சாலை வளைவில் கால்வாய் ஒட்டி சாலையில் இருந்த மணல் சரிந்தது. துவக்கத்தில் சிறிதளவு சரிந்த நிலையில் அவ்வழியே செல்லும் கனரக வாகனங்களால் மணல் மேலும் சரிந்து வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாயை ஒட்டி மணல் சரிந்துள்ள சாலையை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.