| ADDED : ஜூலை 06, 2024 10:41 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. செயற்பொறியாளர் கனகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் சற்குணன், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர்.பாண்டூர் ஒன்றிய கவுன்சிலர் சுலோச்சனா மோகன் ராவ், 'பாண்டூர் ஊராட்சி கனகவல்லிபுரத்தில் 230 கே.வி. துணை மின் நிலையம்அமைக்க 15 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை பணி துவங்கவில்லை. இதனால், அடிக்கடி குறைந்த மின் தடையும், குறைந்த மின்னழுத்தமும் ஏற்படுகிறது. எனவே, அங்கு பணியை விரைவில் துவக்க வேண்டும்' என, மனு அளித்தார். புன்னப்பாக்கம் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, 'கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்ட மின்கம்பம் சிதிலமடைந்துள்ளது. அவற்றை உடனடியாக மாற்றித் தர வேண்டும்' என மனு அளித்தார்.புல்லரம்பாக்கம் கிராமத்தில், தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க ஊராட்சிதலைவர் தமிழ்வாணன் கேட்டுக் கொண்டார். 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, மேற்பார்வை பொறியாளர் உறுதியளித்தார்.