| ADDED : ஆக 10, 2024 10:59 PM
திருத்தணி: திருத்தணி பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட நான்கு பேர் நேற்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.திருத்தணி அடுத்த நாபளூர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஸ்வா, 22. லட்சுமாபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் சஞ்சய், 22. இருவரும் திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஷிப்ட் வேலைக்கு சென்று, இருவரும் நேற்று அதிகாலை ஒரே இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலத்தின் மீது, செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.l திருத்தணி வள்ளியம்மாபுரம் பி.டி.புதுார் சேர்ந்தவர் வாசு,54. விவசாயி. இவர் நேற்று காலை வீட்டின் சீரமைப்பு பணிக்காக சிமென்ட் மூட்டை வாங்கி வருவதற்கு தன் இருசக்கர வாகனத்தில் திருத்தணி பஜாருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருத்தணி - அரக்கோணம் சாலை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.l ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த குண்டூர் நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் மகன் ஹர்ஷவர்தன்,18. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கடப்பாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் வாயிலாக காஞ்சிபுரம் பகுதிக்கு வந்தார். நேற்று காலை கடப்பாவிற்கு செல்வதற்கு பயணியர் ரயிலில் இருந்து காஞ்சிபுரத்தில் இருந்து பயணம் செய்தார். காலை, 7:30 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ஹர்ஷவர்தன் பிளாட்பார கடையில் பிஸ்கட் வாங்கி திரும்பிய போது, ரயில் புறப்பட்டது. ஓடிச் சென்று ரயிலில் ஏறிய போது தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.