பூனிமாங்காட்டில் கண்காணிப்பு கேமரா பழுது போதை பொருள் கடத்தல் தடுப்பதில் சிக்கல்
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. பூனிமாங்காடு கிராமம் மற்றும் வெங்கடாபுரம் வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச் சாராயம் அதிகளவில் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் போதை பொருட்கள் தடுப்பதற்கும், அதை கண்காணிக்கும் வகையில், பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளி அருகே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பராமரிக்காததால், கேமரா ஒயர்கள் மற்றும் கேமரா பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால், ஆந்திர மாநிலம் நகரி ஓஜிகுப்பம் பகுதியில் போதை பொருட்கள் கடத்தல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எனவே மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதாகியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சீரமைத்து, கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா போன்றவை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.திருத்தணி நகராட்சியில், குற்றச்செயல்கள் தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல் கண்காணித்து சீரமைக்க வசதியாக காவல் துறையின் சார்பில், 5 ஆண்டுகளுக்கு முன், பைபாஸ் சாலை, சித்துார் சாலை, அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் என, 30க்கும் மேற்பட்ட இடங்களில், 74 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். இந்த கேமராக்களையும் சரியாக பராமரிக்காததால், தற்போது, 35 கேமராக்கள் மட்டுமே வேலை செய்கிறது. மீதமுள்ளவை பழுதாகியுள்ளது. இதையும் மாவட்ட எஸ்.பி., சீரமைக்க வேண்டும் என திருத்தணி நகர மக்கள் எதிர்பார்கின்றனர்.