கோயம்பேடு:கோயம்பேடு, சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல் துரைபாண்டியன், 52; பெயின்டர். இவரது மனைவி பொன்மாலா, 47. இவர்களுக்கு கோபாலகிருஷ்ணன், 15, என்ற மகனும், யோகதர்ஷினி, 13, என்ற மகளும் உள்ளனர்.வீட்டின் முதல் தளத்தில், மைக்கேல் துரைபாண்டியன் குடும்பத்துடன் வசித்தார். தரைதளம், இரண்டாவது தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.இவர் வீடு கட்டும் போது கொத்தனாராக பணிபுரிந்த, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த வெங்கடேசன், 36, என்பவர், இரண்டாவது தளத்தில் நான்காண்டுகளாக வாடகைக்கு இருந்துள்ளார்.கடந்த 28ம் தேதி மாலை, அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில், மைக்கேல் துரைபாண்டியன் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இவரது இறப்பு குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், கொத்தனார் வெங்கடேசனுக்கும், மைக்கேல் துரைபாண்டியன் மனைவி பொன்மாலாவிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிந்தது.சம்பவத்தன்று வெங்கடேசனுக்கும் பொன்மாலாவிற்கும் தரைதளத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பொன்மாலாவை வெங்கடேசன் அடித்துள்ளார்.இதையறிந்த மைக்கேல் துரைபாண்டியன் ஓடி வரவே, வெங்கடேசன் இரண்டாவது தளத்திற்கு ஓடியுள்ளார். மைக்கேல் துரைபாண்டியனும், அவரது மகன் கோபாலகிருஷ்ணனும் துரத்திச் சென்றுள்ளனர்.அப்போது வெங்கடேசன் தள்ளிவிட்டதில், மைக்கேல் துரைபாண்டியன் பக்கத்து வீட்டு மாடியில் விழுந்து அடிபட்டது தெரிந்தது.இதையடுத்து, தலைமறைவாக இருந்த வெங்கடேசனை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.