அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிக்கு கூடுதல்...ரயில்கள் வேண்டும்: பீக் ஹவர்ஸ் நெரிசலால் 3 லட்சம் பயணியர் தவிப்பு
திருவாலங்காடு: அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இருந்து, தினமும் மூன்று லட்சம் பயணியர் மின்சார ரயில் மூலம் சென்னை செல்கின்றனர். தற்போது இந்த வழித்தடத்தில், 300 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 'பீக் ஹவர்சில்' இந்த ரயில் சேவை போதவில்லை எனவும், கூட்ட நெரிசலில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணிப்பதாகவும் ரயில் பயணியர் புலம்புகின்றனர். எனவே, 'பீக் ஹவர்சில்' மின்சார ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சென்ட்ரல், - திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில், தினமும் 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் அதிகளவில் வருவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது இயக்கப்படும் மின்சார ரயில் சேவை போதவில்லை. கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென, பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அலுவலக நேரம் மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, அம்பத்துார் - திருவள்ளூர் வரையிலான புறநகர் பகுதிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என, அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. மாநகர பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், மின்சார ரயில் பயணமே மக்களின் முதல் விருப்பமாக உள்ளது. இருப்பினும், போதியளவில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் -- அரக்கோணம் இடையே, நான்கு புது ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்து, 15 ஆண்டுகளாகியும் ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, காலை - மாலை மற்றும் அலுவலக நேரங்களில், அரக்கோணம் -- சென்னை மின்சார ரயில்களை அதிகரிக்க வேண்டும். அப்போது தான், பயணியர் கூட்ட நெரிசல் குறையும். அதேபோல், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் இருந்து மீஞ்சூர், அத்திப்பட்டு, கத்திவாக்கம், பொன்னேரி, கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பெரும்பாலானோர், சென்னை நோக்கி செல்கின்றனர். இவர்களும் குறைந்த ரயில் சேவையால் பாதிக்கப்படுகின்றனர். அப்போது, ரயிலின் கம்பியை பிடித்து தொங்கிய படியும், நிற்க இடமின்றியும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் போது, இளைஞர்கள் பலரும் ரயிலில் அடிபட்டு இறந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது. எனவே கும்மிடி, திருவள்ளூர், அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். நள்ளிரவு ரயில் சேவை வேண்டும் அ ரக்கோணம் -- சென்னை, கும்மிடி ---- சென்னை தடத்தில், காலை 3:50 - காலை 8:20 மணி வரை, 20 - 40 நிமிடத்திற்கு ஒரு முறை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. காலை 8:30 - மாலை 3:30 மணி வரை, 1 மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரயில் சேவை உள்ளது. இதனால், கூட்ட நெரிசலில் பயணியர் தவித்து வருகின்றனர். எனவே, இந்த தடத்தில், 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், கொரோனா பாதிப்பிற்கு முன்பிருந்த சென்ட்ரல் -- திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி நள்ளிரவு ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். குறிப்பாக, 10 மணிக்கு மேல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்ல மின்சார ரயில் இல்லை. எனவே, இரவு 11:00 மணிக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும். - வி. தமிழ்செல்வன், திருவாலங்காடு. ரயில்வே அதிகாரிகள் ஆய்வு சென்னை மற்றும் புறநகரில், மின்சார ரயில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் மின்சார ரயில்களை இயக்க கோரி பயணியர், சங்கங்கள் தரப்பில் கோரிக்கை மனுக்கள் அதிகம் வந்துள்ளன. இந்த மனுக்கள் குறித்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அலுவலக நேரம் மற்றும் இதர வேளைகளில், கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படு- சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி.