அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தாத அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர்:மீஞ்சூரில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், நேற்று மீஞ்சூரில், மக்களின் பல்வேறு பிரச்னைகளில் கவனம் செலுத்தாத தமிழக அரசை கண்டித்து, மாவட்ட செயலர் பலராமன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன்னய்யன், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்ராஜா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கூறியதாவது: மீஞ்சூரில் ரயில்வே பாலப்பணிகள் தாமதமாக நடைபெறுவதால், மக்கள் அவதியுறுகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் தவிக்கின்றனர். மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீஞ்சூர் பஜார் பகுதியில், கழிப்பறை வசதி அமைக்கப்படவில்லை. மீஞ்சூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. மீஞ்சூர் சாலையில் செல்லும் கன்டெய்னர் லாரிகளால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு பாதுாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. அவற்றின் விற்பனையை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மீஞ்சூர் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத கவனம் செலுத்தாத தமிழக அரசை கண்டிக்கிறோம். திமுக., ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.