பனப்பாக்கம் ஏரி கலங்கல் சேதம் தேங்கிய மழைநீர் வீணாகும் அவலம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பு உள்ளது. இதில் தேங்கும் மழைநீர், 300 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது.இந்த ஏரி சுற்றிலும் கரை கொண்டதாக அமைந்து உள்ளது. அருகில் உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு, வரத்து கால்வாய் வழியாக கொண்டு சேமிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து இருக்கிறது. இந்நிலையில், ஏரியின் கலங்கல் பகுதி சேதம் அடைந்து இருப்பதால், அதில் உள்ள ஓட்டைகள் வழியாக தேங்கிய மழைநீர் வெளியேறி வீணாகி வருகிறது.மழைநீர் வீணாவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். நீர்வளத்துறையினர் மேற்கண்ட ஏரியின் கலங்கல் பகுதியை புதுப்பித்து, மழைநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:ஏரியை ஆழ்படுத்தினால் அதிகளவில் மழைநீரை சேமித்து வைக்க முடியும். கலங்கல் பகுதியை சீரமைத்தால் மழைநீர் வீணாவதை தவிர்க்க முடியும் என பலமுறை நீர்வளத்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் இருக்கிறது. ஏரியை நம்பியுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.