காடு வளர்ப்பு முயற்சியில் சிறுவர்கள் நாவல் மர விதைகள் விதைப்பு
பொதட்டூர்பேட்டை: ஆறுமுக சுவாமி மலையில், காடு வளர்க்கும் முயற்சியாக சிறுவர்கள் தற்போது நாவல் மர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதட்டூர்பேட்டையில், கலாம் மாணவர் இயக்கம் சார்பில், மரக்கன்றுகள் வளர்ப்பு, நடவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கடந்த, 10 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடவு செய்து வருகின்றனர். தினசரி இந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மற்றும் வேலி அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களின் தன்னல சேவையால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் பலரும் இவர்களுடன் இணைந்துள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மரக்கன்று வளர்ப்பில் சிறுவர்கள் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். தற்போதைய ஆடிப்பட்டத்தில், ஆறுமுக சுவாமி மலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல் விதைகளை விதைத்து வருகின்றனர். கடந்த 2020ல் இந்த சிறுவர்கள் நடவு செய்த அரச மரக்கன்று, தற்போது நன்கு வளர்ந்துள்ள காட்சியை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். சிறுவர்களின் இந்த முயற்சி, பகுதிவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.