| ADDED : பிப் 05, 2024 11:21 PM
திருவள்ளூர்: இலவச வீட்டு மனை வழங்க கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, அம்மனேரி பஞ்சாயத்திற்கு உட்பட்டது கொண்டாபுரம் காலனி. இந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:அம்மனேரி பஞ்சாயத்து, கொண்டாபுரம் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வசித்து வருகிறோம். எங்களுக்கு தனித்தனி வீடு இல்லாததாலும், வீடு கட்ட இடம் இல்லாததாலும், திருமணமான தம்பதி, ஒரே வீட்டில் தங்கி உள்ளோம். இதனால், பலவிதமான இன்னல்களை சந்தித்து வருகிறோம்.எனவே, எங்கள் கிராமத்தில், வீட்டு மனை இல்லாத தம்பதிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இதற்கு தேவையான இடம், எங்கள் கிராமத்தை ஒட்டி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.