பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை, பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிப்பது தொடர்பாக, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருகை தராத மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்களை பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து, அனைவரையும் தேர்வு எழுத வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த சுரக்காய்பேட்டை, சீத்தஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தேர்வாய் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பூந்தமல்லி அரசு பார்வை திறன் குறைவோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி தலைமையாசிரியர்களை கலெக்டர் பாராட்டி, கேடயம் வழங்கினார்.