ஒரே தடத்தில் சரக்கு வாகனம் சேதனைச்சாவடியில் நெரிசல்
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.இந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக ஆறு வழி தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 வழி தடங்களும் உள்ளன.போக்குவரத்து துறையில், ஆள்பற்றாக்குறை காரணமாக, அனைத்து தடங்களும் அடைத்து, ஒரேயொரு தடம் வழியாக கனரக வாகனங்களை அனுமதித்து, ஒவ்வொரு வாகனங்களாக போக்குவரத்து துறையினர், ஆவண தணிக்கை செய்து வருகின்றனர்.இதனால், சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால், குறித்த நேரத்தில் சரக்கை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஆட்களை நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று தடங்கள் வழியாக கனரக வாகனங்களை அனுமதித்து, ஆவண தணிக்கை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.