முதல் நாளில் தொடர் மழை நேற்று கடும் பனி மூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று முன்தினம் முழுதும் தொடர் மழை பெய்த நிலையில், நேற்று அதிகாலையில் கடும் பனிமூட்டமாக காட்சியளித்தது.வங்க கடலில் நிலைகொண்ட தாழ்வு அழுத்தம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல், இரவு வரை, தொடர் மழை பெய்தது. இதனால், பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கின.இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், மழை நின்ற நிலையில், நேற்று அதிகாலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.சாலைகளில் எதிர் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கினை எரிய விட்டு சென்றனர்.முதல் நாள் பெய்த பலத்த மழைக்கு பின், நேற்று பனி மூட்டமாக காட்சியளித்ததால், குளிர் இருந்தது. படிப்படியாக பனி மூட்டம் விலகினாலும், நேற்று மாலை வரை வெயில் அடிக்காமல், வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.