பூங்கா இடம் தனியாருக்கு தாரைவார்ப்பு அலுவலர்கள் மீது கவுன்சிலர்கள் புகார்
திருவள்ளூர்:நகராட்சி பூங்கா இடத்தை தனியாருக்கு தாரைவார்த்த நகரமைப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம், தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ரவி, கமிஷனர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: திருவள்ளூர் நகராட்சியில், விடுபட்ட பகுதியில் சாலை அமைத்துதர வேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. அடைப்பை சீர்படுத்த வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தேங்கிய கழிவுநீரால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழைக்காலத்திற்குள் மழைநீர் கால்வாய் மற்றும் 24வது வார்டு ரயில்வே மேம்பாலத்தின் கீழ், தண்ணீர் வெளியேறும் பகுதியை சீரமைக்க வேண்டும். பூங்கா நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்த பட்டா மற்றும் வீடு கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். உடந்தையாக இருந்த நகரமைப்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். கூட்டத்தில், மழைநீர் கால்வாய், சிறுபாலம், மணவாளநகர் கூவம் ஆற்றில் தடுப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட, 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.