கலெக்டர் அலுவலகத்தில் மாடுகள் அரசு ஊழியர்கள், மக்கள் அச்சம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளால், அரசு ஊழியர்களும், மக்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள், பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.இந்நிலையில், சாலை மற்றும் விளைநிலங்களில் கால்நடைகளை விடக் கூடாது. அதை மீறினால், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என, ஏற்கனவே கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இருப்பினும், கலெக்டரின் எச்சரிக்கையை மீறி, கால்நடைகளை, அவற்றின் உரிமையாளர்கள், சாலைகளிலும், விவசாய நிலங்களிலும் மேய்ச்சலுக்காக அனுப்பி வருகின்றனர்.நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.