நெடுஞ்சாலையோரம் பெருகி வரும் பேனர்களால் காத்திருக்கும் ஆபத்து
திருவள்ளூர்:சென்னை பள்ளிக்கரணையில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் மற்றும் மொபைல்போன் டவர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் விளம்பர பேனர்களால், வாகன ஒட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது, நெடுஞ்சாலையோரம் உயரமான பகுதியில் விளம்பர பேனர் வைப்பதில் அரசியல் கட்சியினரும் களம் இறங்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.