| ADDED : பிப் 09, 2024 11:51 PM
திருத்தணி:சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த மேதினாபுரம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரி திருத்தணியில் நகரில் இருந்து, 5 கி.மீட்டர் துாரத்தில் உள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். மாணவர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து காலையில், 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். அதேபோல் கல்லுாரி முடிந்தும், போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள் பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்வதால் அடிக்கடி தவறி விழுந்து மாணவர்கள் படுகாயம் அடைகின்றனர்.எனவே மாணவர்களின் நலன்கருதி கல்லுாரி நாட்களில் மட்டும் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவ - மாணவியர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.