உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காலி பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் சத்துணவு, அங்கன்வாடி விண்ணப்பதாரர் ஏமாற்றம்

 காலி பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் சத்துணவு, அங்கன்வாடி விண்ணப்பதாரர் ஏமாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் வாயிலாக, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டம் முழுதும் 1,535 பள்ளிகளில் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க, 1,477 அமைப்பாளர், 1,500 சமையலர், 1,505 உதவியாளர் என, 4,482 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது, 758 சத்துணவு அமைப்பாளர், 1,173 சமையலர் மற்றும் 844 உதவியாளர் என, 2,775 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர் 719, சமையலர் 327 மற்றும் உதவியாளர் 661 என, 1,707 பணியிடம் காலியாக உள்ளன. அதேபோல், கர்ப்பிணியர் முதல் பிறந்த ஆறு மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அமைக்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் புழல் தவிர்த்து, மீதமுள்ள 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில், 1,718 அங்கன்வாடி பணியாளர்களில் 1,303 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில், 415 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அங்கன்வாடி உதவியாளராக, 1,718 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 1,379 பேர் மட்டுமே பணிபுரிவதால், 339 இடம் காலியாக உள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில், மொத்தம் 2,461 பணியிடம் காலியாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிவோர், காலி பணியிட எண்ணிக்கையில் உள்ளோரின் பணியையும் கூடுதலாக கவனிப்பதால், பணிச்சுமை, மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்நிலையில், சத்துணவு மையங்களில் 236 சத்துணவு மைய உதவியாளர் பணி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில், 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 உதவியாளர் என, 605 பணியிடத்திற்கு, கடந்த மே - ஜூன் மாதம் நேர்முக தேர்வு நடந்தது. நேர்முக தேர்வு முடிந்து, 7 மாதங்களாகியும், இதுவரை காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள், தங்களுக்கு எப்போது பணி வழங்கப்படும் என தெரியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி