கார் மோதி தம்பதி பலியான வழக்கில் மருத்துவர் கைது
ஆவடி:கார் மோதி தம்பதி உயிரிழந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவேற்காடு, ஈஸ்வரன் நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவரசன், 41; இவரது மனைவி சரண்யா, 36. கடந்த 28ம் தேதி, அறிவரசன் டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் மனைவியுடன், ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி, வசந்தம் நகர் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த 'மாருதி சுசூகி பலேனோ' கார், ஸ்கூட்டி மற்றும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் மோதி, தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், அறிவரசன், சரண்யா தம்பதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ஆவடி, பல்லவன் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ், 46, காயமடைந்தார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், சோராஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இவர், காரை வேகமாக ஓட்டிச் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரிய வந்தது. பாரி மார்க்ஸ் சிகிச்சை முடிந்து, தற்போது நலமாக உள்ளார். இதையடுத்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அதிவேகமாக கார் ஓட்டுதல், அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.