| ADDED : ஜன 25, 2024 10:59 PM
திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் புட்லூர் ரயில் நிலையம் உள்ளது.இந்த புட்லூர் ரயில் நிலையத்தின் அருகில் காக்களூர் தொழிற்பேட்டை மற்றும் புட்லூர் அம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் யோக தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது.இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.அதேபோல், காக்களூர் தொழிற்பேட்டைக்கு ஏராளமான தொழிலாளர்கள் தினமும் ரயிலில் வந்து செல்கின்றனர்.புட்லூர் ரயில் நிலையத்தை நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன.இதில் இரண்டு நடைமேடைகளை பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மூன்றாவது நடைமேடையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் ரயில் நிலைய கடவுப்பாதை அடைக்கப்பட்டது.ஆனால் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் பயணச் சீட்டு அலுவலகம் உள்ளது. கடவுப்பாதை அடைக்கப்பட்டதால் தற்போது பகுதிவாசிகள் நடைமேம்பாலத்தின் மீது ஏறி முதலாவது நடைமேடைக்குச் செல்கின்றனர்.அங்கு பயணச்சீட்டு எடுத்துவிட்டு மீண்டும் நடைமேம்பாலத்தில் ஏறி 2-வது நடைமேடையில் வந்து இறங்கி சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் ரயில்களில் ஏறி செல்கின்றனர்.இந்த நடைமேடை மிக உயரமாக இருப்பதால் வயதானவர்கள், கர்ப்பிணியர், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் ஆபத்தான முறையில் ரயில் வரும் நேரத்தில் கடந்து செல்கின்றனர்.ஆபத்தான முறையில் கடவுப்பாதையை பெரியவர்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை துாக்கிக் கொண்டு கடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில் நிலையத்தில் 'எஸ்கலேட்டர்' அமைக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.