பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயம்
திருவொற்றியூர்: துாய்மை பணியின்போது, மின்சாரம் பாய்ந்து பெண் துாய்மை பணியாளர் படுகாயமடைந்தார். திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த மீனாட்சி, 46; ஐந்து ஆண்டுகளாக, 'ராம்கி' ஒப்பந்த நிறுவனத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவர், நேற்று மதியம், 11வது வார்டு, காலடிப்பேட்டை - மார்க்கெட் லேன் பகுதியில், சாலையோரம் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். பலத்த காயமடைந்தவரை, அங்கிருந்தோர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர். எச்சரித்த எம்.எம்.ஏ., கடந்த வாரம் திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் நடந்த மழைக்கான முன்னெச்சரிக்கை கூட்டத்தில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து, சுட்டிக்காட்டி எச்சரித்தார். இந்நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இனிமேலாவது, மின்வாரியம் விழித்து செயல்பட வேண்டும்.