திருவாலங்காடில் குப்பை கேள்விக்குறியாகும் சுகாதாரம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மாட வீதி, சன்னிதி தெரு, பராசக்தி நகர், பவானி நகர், அம்பேத்கர் நகர் என 10க்கும் மேற்பட்ட நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன.மேற்கண்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை தரம்பிரித்து எரியூட்ட பி.டி.ஓ., அலுவலகம் அருகே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரமாக குப்பையை தரம்பிரிக்காமல் விடப்பட்டுள்ளதால் கிடங்கில் குப்பை அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. திருவாலங்காடு ஊராட்சி நிர்வாகம் குப்பையை சரிவர அகற்றுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர். மேலும் தெற்கு மாட வீதி, பவானி நகர் சாலை, பராசக்தி நகர் என கிராமத்தின் முக்கிய வீதிகளில் குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே கிராமத்தில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி சீரமைக்க திருவாலங்காடு பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.