| ADDED : ஜூலை 09, 2024 05:50 PM
திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். பொருளாளர் பெருமாள் வரவேற்றார்.இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், தங்களது குழந்தைகளுடன் வந்து, வீட்டுமனை பட்டா வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என, கோஷம் எழுப்பினர்.காலை, 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியம், 2:00 மணி வரை தொடர்ந்தது. பின் திருத்தணி கோட்டாட்சியர் தீபா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். இதில், சொந்த வீடுகள் இல்லாத பழங்குடியினருக்கு, இலவச வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கப்படும். தற்போது நான்கு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குகிறேன் என கூறிய கோட்டாட்சியர் தீபா, நான்கு பேருக்கு பட்டா வழங்கினார். தொடர்ந்து மழைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.