மதுவிலக்கு போலீசார் பற்றாக்குறை: கண்காணிப்பு பணியில் தொய்வு பொன்னேரியில் போதை பொருள் விற்பனை ஜோர்
பொன்னேரி:பொன்னேரி மதுவிலக்கு பிரிவிற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் பற்றாக்குறையால், போதை பொருட்கள் விற்பனையை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொன்னேரி மதுவிலக்கு அமல்பிரிவு, கடந்தாண்டு ஆவடி கமிஷனரகத்தின் கீழ் வந்தது. இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ., உட்பட 20 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகிய பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பொறுப்பு எஸ்.ஐ., தான் பணியமர்த்தப்பட்டு உள்ளார். மேலும், எட்டு போலீசார் மட்டுமே உள்ளனர். அவர்களும், செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு அதிகாரிகளின் உத்தரவுப்படி சோழவரம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதே சமயம் பொன்னேரி, திருப்பாலைவனம் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து, எந்தவொரு கண்காணிப்பும் இல்லாததால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மீஞ்சூர், செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் அடிக்கடி கஞ்சா, குட்கா புகையிலை பொருட்கள் பிடிபடுவதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில், அதுபோன்ற செய்திகள் வருவதில்லை. இங்கு, அதிகாலையிலேயே மது பாட்டில், கஞ்சா, கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. பொன்னேரி மதுவிலக்கு பிரிவிற்கு என, அதிகாரிகள் இருந்தால் தானே இவற்றை கட்டுப்படுத்த முடியும். அடுத்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், இங்கு எப்படி பணி செய்வர். ஆவடி கமிஷனரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பொன்னேரி மதுவிலக்கு பிரிவிற்கு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசாரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.