சென்னை : 'சென்னை கோயம்பேடில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்தும், 20 சதவீத பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இன்று முதல் இயக்கப்படும். வெளியூர் பேருந்துகள் இனி, கோயம்பேடு செல்லாது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். புதிய பேருந்து
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் 393.71 கோடி ரூபாயில், 88 ஏக்கரில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு, கடந்த டிச., 30ல் திறக்கப்பட்டது.அதை தொடர்ந்து, ஜன., 24 முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறந்ததில் இருந்தே, அங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இணைப்பு பேருந்து போதுமான அளவில் கிடைக்கவில்லை.இதுகுறித்து, பயணியரின் புகாருக்கு தீர்வு காணும் வகையில், போக்குவரத்து கழகங்களும், சி.எம்.டி.ஏ.,வும், பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கோயம்பேடில் இருந்து செல்லும் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து கழக பேருந்துகளை இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. பட்டியல்
இதற்கிடையே, வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று வெளியிட்ட அறிக்கை: வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இன்று முதல் அனைத்து வகை போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள், இன்று முதல் இயக்கப்படாது. 20 சதவீத பேருந்துகள்
அதாவது, செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 710 பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலுார் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் புறப்பட்டு செல்லும். எனவே, இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகளும் இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும்.தென் மாவட்டங்களில் இருந்து வரும் சென்னை கிளாம்பாக்கம் வரும் பேருந்துகள் மட்டும் பயணியர் வசதிக்காக தாம்பரம் வரை இயக்கப்படும். பயணியரை இறக்கிவிட்டதும், கிளாம்பாக்கத்திற்கு திரும்பி, அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்லும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். அதிருப்தி
பயணியர் கூறியதாவது:கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயக்கும்போதே, இணைப்பு பேருந்துகள் இல்லை என்ற புகார்கள் அதிகமாக எழுந்தன. தற்போது,விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இட நெருக்கடி ஏற்படும். பயணியர் வந்து, செல்லவும் அவதிப்படுவர். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமையும் வரையிலாவது, கோயம்பேடுக்கு 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம். ஆனால், அவசர கதியில் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழித்தடம் கிளாம்பாக்கத்துக்கு மாறும் பஸ்கள் மாதவரத்துக்கு மாறும் பஸ்கள்
திருச்சி 118 18சேலம் 66 17விருத்தாசலம் 30 6 கள்ளக்குறிச்சி 50 16விழுப்புரம் 59 16கும்பகோணம் 52 14சிதம்பரம் 21 5நெய்வேலி 46 11கடலுார் 32 5புதுச்சேரி 35 10திருவண்ணாமலை 125 22போளூர் 30 20வந்தவாசி 46 20
6 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து இன்ஸ்., காவேரி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, கோயம்பேடில் இருந்து நாகர்கோவில் மற்றும் கோவை செல்லும் இரண்டு ஆம்னி பேருந்துகளை நிறுத்தினர். பேருந்தில், பயணியர் இருந்தனர். தடை உத்தரவை மீறி, கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றி வந்தது தெரிந்தது.இதையடுத்து, இரண்டு ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார், அதில் பயணித்த 24 பயணியரை மாற்று பேருந்தில், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பினர்.இந்த இரு பேருந்துகள் உட்பட கோயம்பேடில் இரண்டு, வானகரத்தில் இரண்டு என, மொத்தம் ஆறு ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோயம்பேடில் இருந்து பயணியரை ஏற்றிச் செல்ல, கடந்த 24ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயணியரை ஏற்றியதாக இதுவரை, ஒன்பது பேருந்துகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள், பேருந்தை விடுவிக்கக் கோரி, அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகின்றனர்.
கிளாம்பாக்கத்திற்கு 710, மாதவரத்திற்கு 160 பஸ்கள் மாற்றம்