| ADDED : டிச 01, 2025 03:39 AM
ஊத்துக்கோட்டை: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவான, 'டிட்வா' புயலால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பூண்டி சத்தியமூர்த்திசாகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 1,890 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில், மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இதனால், நீர்வரவரத்து வினாடிக்கு, 700 கன அடியாக குறைந்தது. மூன்று மதகுகளின் வழியே உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று மதியம் ஒரு மதகு வழியே மட்டும் வினாடிக்கு, 80 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இணைப்பு கால்வாய் வழியே வினாடிக்கு, 200 கன அடி வீதம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து உபரிநீர் வெளியேறுவதை, கடந்த 28ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், கலெக்டர் பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் இரவு சென்னை மண்டல தலைமை பொறியாளர் திலகம் ஆய்வு செய்தார். கரையோர கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.