திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுப்பகுதியில், சமீபகாலமாக சிறுவர்கள் பைக், கார் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மோட்டார் வாகன விதிப்படி, பைக் மற்றும் கார் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும். ஆனால், பெற்றோர் பலரும், தங்கள் மகன் அல்லது மகள், சிறு வயதில் கார், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதி, வாகனங்களை ஒப்படைக்கின்றனர். கனகம்மாசத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆற்காடுகுப்பம், நெடும்பரம், கூளூர் ராமஞ்சேரியில், பைக் மற்றும் கார் ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பைக்கில் செல்லும் சிறுவர்கள், டிரைவிங் லைசென்ஸ், ஹெல்மெட் அணியாமல், ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை பின்னால் அமர வைத்துச் செல்கின்றனர். இது ஒருபுறமிருக்க, நெரிசல் மிக்க ரோடுகளில் சிறுவர்கள் அதிவேகமாக கார் மற்றும் பைக்கில் செல்கின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாணவ - மாணவியர் பைக் ஓட்டக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பெற்றோர் சந்திப்பு கூட்டங்கள் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதை பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மதிப்பதில்லை. அதிவேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் சிறுவர்கள், மற்ற வாகன ஓட்டுநர்களை பதற வைக்கின்றனர். பைக்கை மடக்கிப் பிடிக்க முற்படும் போலீசார், இனி கார்கள் மீதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் மற்றும் கார் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.