பெண் தற்கொலை விவகாரம்; காவல் நிலையம் முற்றுகை
மப்பேடு:மப்பேடு அருகே பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மப்பேடு அடுத்த பண்ணுார் பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் மனைவி ஜோதி சாந்தி, 51. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாத்திமா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட தகராறில், பாத்திமா மற்றும் அவரது உறவினர்களான ஏஞ்சல், கீதா, கஷ்மா, எழில் ஆகியோர், ஜோதியின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜோதி சாந்தி, வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மப்பேடு போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெண்ணை தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து, நேற்று காலை அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள், மப்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'தற்கொலை செய்ய துாண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.