| ADDED : ஜன 14, 2024 11:49 PM
திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலைக் கல்லுாரியில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில், கல்லுாரியின் தாளாளர் எஸ்.பாலாஜி பங்கேற்று பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவியர், ஆசிரியைகள் பங்கேற்று வண்ண கோலமிட்டு, புதுபானையில் பொங்கல் வைத்தனர். பின், செங்கரும்பு, மஞ்சள் செடி, நெற்கதிர் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.தொடர்ந்து, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் பொங்கல் குறித்து பேச்சு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற ஆசிரியைகள், மாணவியருக்கு தாளாளர் எஸ்.பாலாஜி பரிசுகள் வழங்கினார். இதில், கல்லுாரி முதல்வர் வேதநாயகி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.