மஞ்சாகுப்பம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
திருவாலங்காடு: மஞ்சாகுப்பம் அரசு நடுநிலை பள்ளியில் மூன்று பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ - மாணவியரின் கற்றல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதுார் அடுத்துள்ளது மஞ்சாகுப்பம் கிராமம். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 30 மாணவ- மாணவியரும், மொத்தம் 70 மாணவ - மாணவியரும் பயின்று வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டில், சமூக அறிவியல் பாடம் தவிர்த்து மற்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். நடப்பு கல்வியாண்டில் ஆங்கிலம், தமிழ், ஆசிரியர்கள் கலந்தாய்வில் வேறு இடம் கேட்டு மாறுதலாகி சென்றனர். கணிதத்திற்கு மட்டும் ஆசிரியர் இருந்தார். இந்நிலையில் ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பள்ளி மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர். பள்ளி மேலாண்மை குழுவினர் கூறியதாவது: மஞ்சாகுப்பம் பள்ளியில் ஆங்கில வழி கல்வி மட்டுமே தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அப்படியானால் மாணவ- மாணவியர் எவ்வாறு ஆங்கிலத்தை புரிந்து படிப்பார்கள். கலந்தாய்வில் ஆசிரியர்கள் மாறுதலாகி சென்றால், பள்ளிக்கு மற்றொரு ஆசிரியர் நியமிக்க வேண்டும். இதுவரை ஏன் நியமிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.