டென்னிஸ் பால் கிரிக்கெட் தளபதி பள்ளி முதலிடம்
திருத்தணி,மாநில அளவில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பை வென்றனர். கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் மற்றும் அறிவியில் கலைக் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவியர் இடையே டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, கடந்த 19ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் என, இரு நாட்கள் நடந்தது. இப்போட்டியில், 20 மாவட்டங்களில் இருந்து, 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர். தளபதி பள்ளி மாணவியர், டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாமிடத்தை பிடித்த மாணவ - மாணவியருக்கு, பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.