மாற்று இடத்தில் பதியம் செய்த மரங்களின் வளர்ச்சி கேள்விக்குறி
பொன்னேரி:சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் அருகே, ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிலம்பாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள மண்டபத்தின் ஒரு பகுதியும், வேம்பு மற்றும் அரச மரங்கள், இணைப்பு சாலை பணிகளுக்கு இடையூறாக இருந்தன. இணைப்பு சாலைக்காக கோவில் மண்டபத்தின் ஒரு பகுதி கடந்தாண்டு நவம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது.பக்தர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, வேம்பு மற்றும் அரச மரங்களின் கிளைகள் வெட்டி எடுக்கப்பட்டு, வேருடன் மரங்களை பெயர்த்து எடுத்து, கோவில் அருகே இடையூறு இல்லாத இடத்தில் பதியம் செய்யப்பட்டது.ஆறு மாதங்களாகியும், பதியம் செய்யப்பட்ட மரங்கள் புத்துயிர் பெறாமல் இருக்கின்றன. வேருடன் பதியம் செய்யப்பட்ட மரங்கள் தற்போது காய்ந்த நிலையில் உள்ளன. மீண்டும் புத்துயிர் பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.கண்துடைப்பிற்காக மாற்று இடத்தில் வைத்துவிட்டு, அவற்றை உரிய முறையில் பராமரிக்காமல் விட்டுவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, கோவில் நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், பதியம் செய்யப்பட்ட மரங்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.