ஊத்துக்கோட்டை : பெரியபாளையத்தில், ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் நான்கு
பேரை அரிவாளால் வெட்டிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.பெரியபாளையம்
அடுத்த, அரியப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 60; ஐஸ் வியாபாரி. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோபி, 25, மன்னார்குடி ராஜா, 28,
மத்தூர் பாண்டியன், 32, சென்னை எம்.ஜி.ஆர். நகர் மூவேந்தன், 42, மண்ணடி
விஜய், 25 மற்றும் சங்கரன்கோவில் அய்யப்பன், 24 ஆகிய ஆறு பேர் தனது
உறவினர்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், பொங்கல் வைப்பதை அடுத்து
அங்கு சென்றனர்.நேற்று முன்தினம் இவர்கள் ஆறு பேரும் குடித்து விட்டு,
தாங்கள் கொண்டு வந்த காரில் சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது
அரியப்பாக்கம் பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமதாசிடம்
சென்று, ஐஸ் வாங்கி பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். மேலும்,
அவரிடமிருந்த ஆயிரத்து 30 ரூபாய் பணத்தை பிடுங்கிச் சென்றனர்.ராமதாஸ்
போட்ட கூச்சலை கேட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த மதுரை முத்து, இளையராஜா,
சுரேஷ், ஜீவானந்தம் ஆகியோர் பைக்கில் காரை பின்தொடர்ந்து சென்று
பெரியபாளையம் பஜாரில் மடக்கினர். இதில் ஆத்திரமடைந்து காரில் இருந்து
வெளியே வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் நான்கு பேரையும்
சரமாரியாக வெட்டினர்.இதைப்பார்த்த பொதுமக்களில் சிலர் அவர்களை சுற்றி
வளைத்து விட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த
பெரியபாளையம் போலீசார் ஆறு பேரையும் கைது செய்தனர். காயமடைந்த நான்கு
பேரையும் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்