வாலிபர் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் மூவர் கைது
கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, 26. இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டின் அருகே நின்றிருந்தபோது, 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்த நபர்கள், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சேது, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கடம்பத்துார் போலீசார் கூறியதாவது: பேரம்பாக்கம் பங்க்கில் பெட்ரோல் போட்டதில் ஏற்பட்ட தகராறில், இருளஞ்சேரி முகேஷ் என்பவர், சேதுவின் உறவினர் விஜய் என்பவரை தாக்கியுள்ளார். இதையடுத்து, சேது தன் நண்பர்களுடன் முகேஷ் மற்றும் அவரது நண்பரான லோகேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் முகேஷ், 21, நரசிங்கபுரம் அபிமன்யூ, 21, வினோத்குமார், 24 ஆகியோர், சேது மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.