| ADDED : நவ 23, 2025 03:29 AM
திருத்தணி: வயல்வெளியில் நாற்று நடுவதற்கு மாடுகளை வைத்து உழும் போது, திடீரென மின்சாரம் பாய்ந்து இரு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதில், விவசாயி லேசான காயத்துடன் உயிர்தப்பினார். திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடரத்தினம், 55; விவசாயி. இவர், நேற்று தன் நிலத்தை சமன் செய்வதற்கு, வீரகநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 60, என்பவரது இரு மாடுகளை ஓட்டி வந்தார். பின், காலை 6:30 மணியவில், நிலத்தை உழும் பணிக்காக, நெட்டேரிகண்டிகை கீழ்காலனியைச் சேர்ந்த அருள், 45, என்பவரையும், வெங்கடரத்தினம் அழைத்து வந்தார். இரு மாடுகளை வைத்து உழுத அருள், விவசாய நிலத்தில் இருந்த மின்மாற்றியின் ஸ்டே கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு, இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அருள் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். தகவல் அறிந்து வந்த திருத்தணி மின்வாரிய துறை அதிகாரிகள், வரு வாய்த்துறையினர் மற்றும் போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்த மாடுகளுக்கு, 60,000 ரூபாய் வழங்க வேண்டும் என, அதன் உரிமையாளர், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.