பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் அமைக்க, குருவராஜகண்டிகை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது. அதை மறுசுழற்சி செய்திட, ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே அரசு நிலத்தில், பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் நிறுவ, நேற்று முயற்சி மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள், எதிர்ப்பு தெரிவித்து குருவராஜகண்டிகை ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., சந்திரசேகர், கிராம மக்களிடம் பேசினார். இதனால் எந்த பாதிப்பும் இல்லை என விளக்கம் அளித்தும் கிராம மக்கள் ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இயந்திரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.