| ADDED : ஜூன் 21, 2024 02:06 AM
துாத்துக்குடி;துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, 50. இவர், காங்., துாத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த இவர், திடீரென கையில் அக்னி சட்டியும், மற்றொரு கையில், காங்., முன்னாள் பிரதமர் ராஜிவ் படத்தையும் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்.'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்' என கோஷங்களை எழுப்பிய அவர், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, கோரிக்கை மனுவை அலுவலகத்தில் வழங்கிய அவர், அங்கிருந்து சென்றார்.முதல்வருக்கு எதிராக, கூட்டணி கட்சியான காங்., மாவட்ட நிர்வாகி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.