உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடலில் மூழ்கி சிறுமி, சித்தப்பா பலி

கடலில் மூழ்கி சிறுமி, சித்தப்பா பலி

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் --- சோலையம்மாள் தம்பதியின் மகள்கள் சாதனா, 5, சகானா, 4, ஆகியோருக்கு காதணி விழா, விளாத்திகுளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் பங்கேற்க வந்திருந்தவர்கள் சிலர் வேம்பார் கடலில் நேற்று குளிக்கச் சென்றனர்.வேம்பார் கிழக்கு தெருவில் அமைந்துள்ள கடலின் முகத்துவாரத்தில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அலைச்சீற்றம் அதிகமாக இருந்ததால், சிறுமி சாதனா திடீரென கடலில் மூழ்கினார்.அவரை காப்பாற்ற முயன்ற சிறுமியின் சித்தப்பா டேனி, 25, என்பவரும் அலையில் சிக்கி மூழ்கினார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு உதவி கேட்டனர். அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் உடனடியாக இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், சாதனா, டேனி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வேம்பார் கடலோர காவல் படை போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை