| ADDED : ஜூலை 31, 2024 11:32 PM
துாத்துக்குடி:தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 2001 -- 2006 வரை அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.விசாரணை துாத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், மற்றும் அவரது தம்பிகள் சண்முகானந்தன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கில், 108 சாட்சிகள் உள்ள நிலையில், முக்கிய சாட்சியாக வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., பெருமாள்சாமி உள்ளார்.அவர் நேற்று கோர்ட்டில் ஆஜராகி, நான்கு மணி நேரம் சாட்சியம் அளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஓத்தி வைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.